Wednesday 29 January 2020

29.01.2020 - சன்மார்க்க அன்பர்களுக்கு உணவு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றி நன்றி நன்றி

இன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்ற அகவல் பாராயணம் நிகழ்விற்கு
சென்னை மற்றும் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த 1500க்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு, நடமாடும் தெய்வங்களுக்கு, திருஅருட்பிரகாச வள்ளலாரின் பேரருள் பெரும் கருணையினால்,
தீபம் அறக்கட்டளையின் சார்பாக காலை உணவு அன்போடு பரிமாறப்பட்டது.








இந்த அருள் உணவு தயாரிக்கும் பணியில் விடியற்காலை இரண்டு மணிக்கு அடுப்பேற்றி ஓயாது தொண்டு ஆற்றிய தீபம் சேவகர்களுக்கு குறிப்பாக
தீபம் பாரதி
தீபம் வேல்முருகன் அய்யா
தீபம் கணபதி
தீபம் கிருஷ்ணமூர்த்தி ஐயா
தீபம் பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு அனந்தகோடி வந்தனம் வந்தனம் வந்தனம்.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Monday 27 January 2020

29.01.2020 - கருணை இல்லம் குழந்தைகளுக்கு உணவு

மகிழ்வித்து மகிழ்தல்

ஓடி ஓடி உழைக்க வேண்டும்
ஊருக்கெல்லாம் கொடுக்கவேண்டும்
ஆடி பாடி நடக்கவேண்டும்
அன்பை நாளும் வளர்க்க வேண்டும்.

என்ற அற்புத வரிகளுக்கேற்ப தீபம் அறக்கட்டளையானது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள குழந்தைகள் காப்பகம்
முதியோர் காப்பகங்கள்
மாற்று திறனாளி இல்லங்களுக்கு
உடைகள் தந்து
உணவு தந்து,
அரிசி தந்து
ஆடி பாடி மகிழ்விக்க கூடிய அருட்பணியை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாடம்பாக்கம் கருணை இல்லம் குழந்தைகளுடன் ஆடிப்பாடி உணவு தந்து மகிழ்வித்த தருணம்... ஓரிரு காட்சிகளை ஒரு நிமிட பதிவாக கண்டு மகிழுங்கள்...








இந்த சமுதாய நிகழ்விற்கு உபயம் செய்த வேளச்சேரி எக்ஸலண்ட்  மருத்துவமனை நிறுவனர் டாக்டர் B செந்தில் நாதன் ஐயா அவர்களையும் ஓயாது சேவை செய்து வரும் தீபத்தின் சேவதாரிகளையும் தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

அடுத்த நிகழ்வு அடையாறு ஆந்திர மகிள சபா குழந்தைகளுக்கு உணவு தந்து அரசி கொடுத்து ஆடைகள் கொடுத்து ஆடிப்பாடி மகிழ்விக்க... வாருங்கள் மகிழ்வித்து மகிழ்வோம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!

தயவுடன்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை

சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு வழங்குதல்

நாள் : 29 1 2020 புதன்கிழமை
நேரம் :காலை 7 மணி
இடம் : குருநானக் கல்லூரி வேளச்சேரி

வரும் புதன்கிழமை 29 1 2020 அன்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திரு அகவல் ஓதுதல் என்ற பிரம்மாண்டமான நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நிகழ்ச்சிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்களுக்கு காலை உணவு தருவதற்கு இறையருள் நமக்கு கட்டளையிடுகிறது.
பாக்கு தட்டில் உணவு தர இருக்கிறோம். நிதி பொருள் உழைப்பு மூன்றும் தேவைப்படுகிறது.

காலை உணவு:
1) Sakkarai Pongal
2) Ven pongal
3) Sambar
4) Cocount Chutney
5) Idili

இந்த அற்புதமான சமுதாயப் பணிக்கு உணவு தயாரித்து கொடுப்பதற்கு தீபம் சேவடிகள் நேரில் வந்து உதவுமாறு தீபம் கேட்டுக்கொள்கிறது.

திருஅகவல் நிகழ்வில் தீபம் நிர்வாகிகள் மற்றும் தீபம் சேவகர்கள் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெறுமாறு தீபம் அழைத்து மகிழ்கிறது.

இட்லி மாவு அரைத்தல்
இட்லி தயாரித்தல் மிகப்பெரிய பணி.
புதன்கிழமை விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணி அளவில் அடுப்பு ஏற்ற வேண்டும்.

சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் நாளை இரவே தர்ம சாலைக்கு வந்து விடவும்.

எதிர்பார்ப்புடன்...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday 26 January 2020

குளிரால் வாடும் ஆதரவற்றவர்களுக்கு போர்வைகள் வழங்குதல்

இன்று(26.1.20) நள்ளிரவு 12.10 முதல் அதிகாலை 4.10 மணி வரை கிண்டி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் ரோட்டோரம்,
பஸ் நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் பாலங்களுக்கு அடியில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களுக்கு நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் சூடான உணவு பாக்குதட்டில் பசித்தவர்களுக்கு குடி தண்ணீருடன் பிரார்த்தனையோடு தரப்பட்டது.










இந்த அற்புதமான சமுதாயப் பணியில் இரவு முழுவதும் தொண்டு செய்த இறைவனுடைய செல்ல பிள்ளைகளாகிய தீபத்தின் கண்மணிகளையும், நூற்றுக்கணக்கான போர்வைகளுக்கு நிதியாகவும், போர்வைகளாகவும், அள்ளிக்கொடுத்த தர்மவான்களை,
வாழும் வள்ளல்களை
தீபம் அறக்கட்டளை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

தயவுடன் ...
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Sunday 19 January 2020

19.01.2020 - ரோட்டோரம் ஆதரவற்றவர்களுக்கு நள்ளிரவில் போர்வைகள் வழங்குதல் -11 ஆம் ஆண்டு

சென்னை வேளச்சேரி
தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும்
ரோட்டோரம் பாலங்களுக்கு அடியில்
பாலங்களுக்கு மேல்
பஸ் நிறுத்தங்களில்
ரயில்வே நிலையங்களில் நள்ளிரவில் சாலைகளை சுத்தம் செய்யும் பாமர மகளிருக்கு ஆதரவற்றவர்களுக்கு
குளிரால் நடுங்கி கொண்டிருப்பவர்களுக்கு தொடர்ந்து 11 வது ஆண்டாக தேடிச்சென்று போர்வைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்று (19.1.20) நள்ளிரவு
1 மணி முதல் விடியற்காலை வரை தீபம் அறக் கட்டளையின் சார்பாக நள்ளிரவில் மனிதநேய மாண்புடன் போர்வைகள் அளித்த காட்சி.
(1 நிமிட படக்காட்சியாக).



போர்வைகளுக்கு நிதி தந்த அருளாளர்களை
தீபம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டாம் கட்டமாக வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி  (சனிக்கிழமை இரவு) டாட்டா ஏஸ் வாகனம் மூலம் நள்ளிரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நூற்றுக்கணக்கான போர்வைகள் மற்றும் உணவு வழங்கக்கூடிய அற்புதமான நிகழ்வு.

இந்த புண்ணிய தொண்டில் ஆன்மநேய அன்பு உள்ளங்கள் கலந்து கொண்டு
ஆன்ம லாபம் அடையுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

தயவுடன் ...
என்றென்றும் இறை பணியில்...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
9444073635

Saturday 18 January 2020

Provisions for Dharumasalai

இன்று தீபம் அறக்கட்டளையின் சார்பாக தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற தர்ம சாலைகளுக்கு திருவமுது அருட் கஞ்சிக்காக Rs.60 ஆயிரத்திற்கு (35 மூட்டைகள்)

குருணை
மிளகு
சீரகம்
வெந்தயம்
பைத்தியம் பருப்பு மற்றும்
ஓமம்





பாரிஸ் சரவணா ஸ்டோரில் வாங்கப்பட்டு இன்று தீபம் அறக்கட்டளையின் மூலம் அனுப்பப்பட்டது.

Wednesday 15 January 2020

தர்மம் செய்வதால் அடையும் நன்மைகள்

=====================
திருமந்திரம்
====================

இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலதாகும்.

உருமிடி நாகம் உரோகணி               
கழலை தருமம் செய்வார்
பக்கல் தாழாகிலவே.

- திருமூலர்

பொருள்
========

இருமலும், இரத்தம் குறைவால்வரும் இரத்த சோகை என்னும் நோயும், சளியும்,
கணைச்சூடும் போன்றவை
எல்லாம் பிறருக்கு உதவி செய்யாதவர்க்கே உரிய
உடைமைகளாகும்.

அச்சம் தரும் இடி,
நாகம்-இராகு,கேது ஆகிய பாம்புகளால் வரும் தொல்லைகள்,
உரோகிணி
நட்சத்திரத்தால்   சிலருக்கு விளையும் தீமைகள்,முன் கழுத்துக் கழலைபோன்றகட்டிகள், எல்லாம், தருமம்
செய்பவர்கள்
பக்கம் நெருங்காது.

சித்தர்கள் பிறருக்கு தருமம் செய்வதை வற்புறுத்திப்பாடல்கள் படைத்துள்ளனர். உலக
மக்கள் பசியற்று இருப்பதே அவர்களின்
தலைமையான குறிக்கோள்.
திருமூலரும் இப்பாடலில் தருமத்தை வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க தர்மம் !!!
வளர்க தர்மம்!!!

தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!

என்றென்றும் அறப்பணியில்... தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
9444073635

Sunday 12 January 2020

12.01.2020 - பசி ஆற்றுவித்தல் தொடர் திருத்தொண்டு:


ஒவ்வொரு மாதமும் மாத பூச நன்னாளில் வடலூர் சத்திய தருமச்சாலையில் தீபம் அறக்கட்டளையின் திருத்தொண்டர்கள் நாகப்பட்டினம் அகல்விளக்கு மன்ற சன்மார்க்க சாலை சம்பந்திகள் உடன் சேர்ந்து அன்னம் பாலிக்கக் கூடிய திருத்தொண்டில் கடந்த 77 மாதங்களாக நாள் முழுவதும் சத்திய தரும சாலை ஓய்வின்றி தொடர் பசி ஆற்று வித்தல் திருப்பணி செய்து வருவது தாங்கள் அறிந்ததே.






11.1.20- மாத பூச நன்னாளில் திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் தம் திருக்கரங்களினால் ஏற்றிய அடுப்பில்
தீபம் திருத்தொண்டர்கள், நாகப்பட்டினம் சன்மார்க்க அன்பர்களின் அற்புதமான சேவையின் சில காட்சிகள்...
கண்டு மகிழுங்கள்...
தொண்டு செய்த
திரு தொண்டர்களை வாழ்த்துங்கள்...
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்...

தொண்டு பற்றி அவ்வையார்:

எது பெரிது?

பெரிது பெரிது புவனம் பெரிது!
புவனமோ அரவின் தலை பாகம்!
அரவமோ உமையவள் இடதுகை சிறுவிரல் மோதிரம்!
அன்னையோ ஐயனுள் அடக்கம்!
ஐயனோ தொண்டர்தம் உள்ளத்து அடக்கம்!
தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே!!!

தொண்டு செய்வோம் !!!
நீண்டு வாழ்வோம்!!!

அடுத்த மாதம் பிப்ரவரி எட்டாம் தேதி (8.2.20) சனிக்கிழமை தைப்பூசம்.

வடலூரில் மூன்று நாட்கள் தொடர் அன்னதான திருத்தொண்டு ...

வடலூர் ஞானசபையில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண...

வடலூர் ஜோதி தரிசனம் காண வரும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு
தீபம் அறக்கட்டளையின் சார்பாக 2 டன் அரிசியில் அன்னம் பாலித்தல்...

விரிவான செய்தி விரைவில்...

எல்லாப் புகழும் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கே !!!

தொடர் தொண்டு செய்யும் தீபம் அறக்கட்டளையின் அடியவர்களையும்,
உலகம் முழுவதும்
உண்மை தொண்டு செய்துவரும்
ஆன்ம நேய அன்பு உள்ளங்களின் பொற் பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.

தயவுடன் 
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை

Friday 3 January 2020

இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம்

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 




கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது. 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த
யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர்  சிவம் V.P.,மாதேஸ்வரன்
அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.

நாள்: 5-1-2020 ஞாயிறு
நேரம்: காலை 9-00 மணிமுதல் மதியம் 1-00 மணிவரை

இலவச மருத்துவ உதவி முதலில் வரும் 30 பேருக்கு மட்டும்

மருத்துவ முகாம் நடைபெறும் இடம்:
நித்ய தீப தருமச்சாலை 
7/8, புத்தேரிக்கரைத் தெரு,
தண்டீஸ்வரம் கோவில் அருகில்,
வேளச்சேரி, சென்னை-42
044-22442515, 9444073635

அனைவரும் வருக!
ஆரோக்கிய நலம் பெறுக!

மாதாந்திர சன்மார்க்க சொற்பொழிவு


03.01.2020 - மாதாந்திர மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவி

ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று.

நாள்: 3.1.2020.

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஆதரவற்ற திருமதி டெல்லிபாய் அவர்களுடைய அன்பு மகன் சேகர் அவர்கள் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாத நிலையில் அவருக்கு மாதந்தோறும் டயலிசிஸ் மருத்துவ உதவி ரூபாய் 5000 பொற்காசுகள் காசோலையாக...





கும்பகோணத்தை சார்ந்த  ஓய்வு பெற்ற  ஆசிரியர் மூத்த சன்மார்க்கி திரு கணேசன் ஐயா அவர்களின் டயலிசிஸ் சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக மாதந்தோறும் 5000 பொற்காசுகள் வங்கி பரிமாற்றமாக...

போலியோ பாதிப்பினால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி பெரம்பூரை சேர்ந்த  திரு பாலச்சந்தர் குடும்பத்திற்கு மாதாந்திர அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி...

அயனாவரத்தில் சேர்ந்த பார்வையற்ற தம்பதிகள் திரு செல்வம் குடும்பத்திற்கு மாதாந்திர அரிசி வாழ்வாதார உதவி...

ஊரப்பாக்கத்தை சேர்ந்த உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி திரு பாலாஜி அவர்களுக்கு வாழ்வாதார அரிசி உதவி மற்றும் மருத்துவ உதவி...
நேற்று வழங்கப்பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த திருமதி அங்கம்மாள் அவர்களுக்கு 2500 பொற்காசுகள் மருத்துவ தொகையாக மாதந்தோறும் தரப்படுகிறது.

மேற்கண்ட அறப்பணிகளுக்கு தொடர்ந்து நல்லாதரவு தரும் நல் உள்ளங்களை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம். எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குள்ளே இருந்து அற்புதங்கள் செய்யுமாக!

தீபம் அறக்கட்டளையின்
அன்றாட ...
வாராந்திர ...
மாதாந்திர ...
வருடாந்திர ...
பல்வேறு அறப்பணிகளுக்கும்,
அன்னதான பணிகளுக்கும் நன்கொடை அளிக்க விரும்புபவர்கள்
தானதர்மம் செய்ய விரும்புபவர்கள்
தீபத்தை தொடர்புகொள்ளலாம்.
அல்லது நன்கொடைகளை காசோலையாகவோ அல்லது வங்கி பரிமாற்றமாகவோ அனுப்பலாம்.

அரசு பதிவுபெற்ற  வருமான வரி விலக்கு பெற்ற  அற நிறுவனம் என்பதால்  ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்.

தயவுடன் ...
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
(சமுதாயப் பணியில் 23 ஆண்டுகளாக...)
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

Thursday 2 January 2020

02.01.2020 - நித்ய தீப தருமச்சாலையில்... மளிகைப் பொருட்கள்

மூன்று தெய்வங்கள்


இன்று தருமச்சாலையில்  தினசரி அன்ன தர்மத்திற்காக பாரிமுனையில் மொத்த கொள்முதலாக சரவணா ஸ்டோரில் மளிகை கடையில் Rs.75,456 முதல்தர மளிகை பொருட்கள் வாங்கி வந்து,
7 1/2 மணி நேரம் சேவை செய்த (மதியம் 4 மணியிலிருந்து இரவு 11.35 மணிவரை) அற்புதமான தொண்டு செய்த

பாரதி அவர்களையும்...
 கோபால் அவர்களையும்...
கணபதி அவர்களையும்...







 தீபம்  வாயார மனதார உளமார வாழ்த்தி மகிழ்கிறது.

வாழ்த்துக்களுடன் ...
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

Wednesday 1 January 2020

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020

  
சென்னை வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளையின் 
2020 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 

தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய அறப்பணிகளுக்கு, 
தொடர்ந்து மாதந்தோறும் 
வாரி வழங்கும் கொடை  வள்ளல்களுக்கும், 
பொருட்களை அருளாக மாற்றும் ஜீவகாருண்ய  தயவாளர்களுக்கும், 
தீபம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கும் ஆடுகின்ற சேவடிகளுக்கும்,   
சன்மார்க்க உடன்பிறப்புக்களுக்கும்,
தீபம் அறக் கட்டளையின் நலம் விரும்பிகளுக்கும்,
உலகம் முழுவதிலும் நடைபெறும் உலக தர்மச் சாலைகளுக்கும்,
தீபம் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவ மாணவிகளுக்கும் 
மற்றும் 
தீபத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் 
தீபம் தனது உளம்கனிந்த  புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

புதிய புத்தாண்டில் அனைவரும் வளமும், நலமும் நிறைந்து சீரும் சிறப்புமாக வாழவும், 
இயற்கை சீற்றம் ஏற்படா வண்ணம் 
எல்லா உயிர்களும் இன்புறவும், 
உலகில் பஞ்சம், 
பசி நீங்கி தர்மம் செழித்திடவும் இந்த 2020 புத்தாண்டு நன்னாளில் 
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பாதம் பணிந்து தீபம் ப்ரார்த்திக்கிறது.

எல்லாம் வல்ல இறைவனிடம் தீபத்தின் பொதுப் பிரார்த்தனை:

ஆணவம் அடங்கி 
அன்பு நிறைந்த புத்தாண்டாக...

அகங்காரம் ஒழிந்து 
அடக்கமுள்ள புத்தாண்டாக...

ஒழுக்கம் மிகுந்து கருணையுள்ள புத்தாண்டாக...

பஞ்சம் போய் பசுமை காணும் புத்தாண்டாக...

உயர்வு தாழ்வு மனப்பான்மை போய் சமரசப் புத்தாண்டாக...

சோதனைகளையும் வேதனைகளையும் நீக்கும் சாதனை புத்தாண்டாக...

எல்லோரும் எல்லாவற்றையும் பெறும் புத்தாண்டாக...

பகுத்தறிவுடன் சிந்தித்து உண்மையை உணர்த்தும் புத்தாண்டாக...

ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆன்மநேயத்தை உணர்த்தும் புத்தாண்டாக...

சாதி சண்டைகளும் மத சண்டைகளும் நீங்கும்  புத்தாண்டாக...

அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்கும் புத்தாண்டாக...

அனைவரது உள்ளத்திலும் இல்லத்திலும் தர்மமும் தொண்டும் நிறைந்த புத்தாண்டாக...

சத்திய வழியை காட்டும் நித்திய புத்தாண்டாக...

நிறைவும் நிம்மதியும் நிறைந்த புத்தாண்டாக...

அமைதியும் ஆனந்தமும் விளங்கும் புத்தாண்டாக...

மனிதகுல குற்றங்கள் குறைந்து, குற்றங்களே இல்லாத புத்தாண்டாக...

மனித இனத்திற்கு உண்டாகும் நோய்கள் குறைந்து, ஆரோக்கியமான புத்தாண்டாக...

தொழில் செய்வோர் தொழில் தர்மத்தை கடைபிடிக்கும் புத்தாண்டாக...

வீடும் நாடும் நலம் பெறும் புத்தாண்டாக...

மது மாமிசம் மறந்து மாமனிதர்களை வாழும் புத்தாண்டாக...

வீடு வளர நாடு வளர இளைஞர்கள் உற்சாகமாய் விசுவாசமாய் உண்மையாய் உழைக்கும் புத்தாண்டாக...

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை ஜாதி மதங்களை கடந்து  மனித நேயத்தை வளர்க்கும் புத்தாண்டாக ...

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்யும் புத்தாண்டாக...

மலரட்டும்...
விடியட்டும்...
ஒளிரட்டும்...

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு  மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!

வாழ்க தருமம் !
வளர்க தருமம் !

தருமம் செய்வோம் !
தயவுடன் வாழ்வோம் !

என்றும் தயவுடன்...
தீபம் பாலா
நிறுவனர்
தீபம் அறக் கட்டளை
சென்னை வேளச்சேரி

தீபம் தருமச் சாலைக்கு பசியோடு தேடி வருபவர்களுக்கு ஜாதி மதங்களை கடந்து ஆன்ம நேயத்தோடு பசி தீர்க்கும் அன்ன ஆலயமாகவும்...
தீபம் பசித்தவர்களைத் தேடிச் சென்று பசியாற்றி வைக்கும் நடமாடும் தருமச்சாலையாகவும்...23 ஆண்டுகளாக...

... விரைவில் 25வது வெள்ளிவிழா ஆண்டை நோக்கி...

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்.

பட்டினியில்லா பாரதம் படைப்போம்...

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...